இலங்கைக்கு மீண்டும் தரம் குறைந்த எரிபொருள் இறக்குமதி? தமது நிறுவனத்தால் தரம் குறைந்த பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை இலங்கை - இந்திய எண்ணை நிறுவனம் மறுத்துள்ளது.
40,000 மெட்ரிக் டொன் எரிபொருள் அடங்கிய எண்ணெய் கப்பல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதெனவும் அதில் தரம் குறைந்த எரிபொருள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கப்பலில் காணப்படும் எரிபொருளில் 33,000 மெட்ரிக் டொன் நிறம்மாறி காணப்படுவதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதென அதன் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், 7,000 மெட்ரிக் டொன் பெ ற்றோலில் உரிய அளவு ஒக்டெயின் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கொண்ட ஆய்வில், இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தொகை குறித்து இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் பரிசோதனை மேற்கொண்டு வருவதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் சுபோத் தக்வால் தெரிவித்தார்.

பரிசோதனை அறிக்கை இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
விசாரணை அறிக்கையை கணக்கிலெடுக்காது லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது கொலன்னாவை களஞ்சியத்திற்கு குறித்த எரிபொருளை எடுத்துச் செல்கிறதா என கேள்வி எழுப்பியது.

எனினும் அதனை முற்றாக மறுத்த சுபோத் தக்வால், இலங்கையில் தரமற்ற எரிபொருளை விநியோகிக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார்.-AD-