பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்க் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம் மக்களிடமும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர், மக்கள் காங்கிரஸ் முன்னாள் அட்டாளைச்சேனை தவிசாளர் அன்ஷில் உள்ளிட்ட பள்ளிவாசல் சம்மேளனத்தினர் முஸ்லிம்களும் இணைந்து கொண்டனர்.
நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள் மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திண்டாடிய பொலிஸ் மற்றும் இராணுவம்
போராட்டக்காரர்களை வழிமறிக்க இராணுவத்தினரும், பொலிசாரும் பல தயார்படுத்தல்களை மேற்கொண்ட சமயங்களில், அந்த பாதைகளை தவிர்த்து வேறு மார்க்கங்களையும் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் முன்னேறி வருகின்றனர்.
இன்று காலை 9.40 அளவில் பொத்துவில் நகரில் போராட்டம் ஆரம்பித்தது. போராட்டக்காரர்களிடமிருந்த பதாதைகளை பறிக்க பொலிசார் முயன்றபோது, அவர்களை தள்ளிவிட்டு பேரணி முன்னகர்ந்தது. பொலிசார் வீதித்தடைகளை அமைத்த போது, அதையும் உடைத்தெறிந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறியுள்ளனர்.
சுமார் ஒன்றரை கிலோமீற்றர் நகர்ந்த போது குண்டுமடுவில், பொலிசார் தடை செய்தனர். அங்கிருந்து வாகன பேரணியாக போராட்டக்காரர்கள் முன்னேறினர்.
பின்னர், தாண்டியடி, திருக்கோவில், தம்பட்டை, ஆலையடி வேம்பு பகுதிகளில் வாகன பேரணியை பொலிசார் தடுத்தனர். சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்தே தாம் முன்னேறுவதாக விளக்கமளித்து போராட்டம் தொடர்கிறது.
இடையில், கோமாரியில் சுமார் அரை கிலோமீற்றர் தூரம் நடைபவனியாக பேரணி சென்றது.
0 Comments