ரஷ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவினைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இரண்டாவது செயலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ளார்.
ரஷ்யாவின் தென்பகுதியில் ரொஸ்ரொவ் ஒன் டொன் நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரொஸ்ரொவ் நகரில், ´ரஷ்யாவில் இலங்கையின் நாட்கள்´ என்ற நிகழ்ச்சிக்காக அந்த நகருக்கு சென்ற இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவினைஞரே, வாகனம் ஒன்றினால் மோதிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் நெஞ்சில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைத் தூதரக அதிகாரிகளை அவர்கள் தங்கியிருந்த டொன் பிளாசா விடுதி வரை அவர்களின் பொதிகளுடன் ஏற்றிச் சென்ற பார ஊர்தியின் இரண்டு சாரதிகள் அவர்களிடம் மேலதிக பணத்தைக் கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது எனக் கூறப்பட்டது.
இதன்போதே, எழுதுவினைஞரை தமது வாகனத்தால் மோதிக் கொன்று விட்டும், தூதரக இரண்டாவது செயலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டும் அவர்கள் தப்பிச் சென்றிருக்கிறார்கள்.
இவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர் என ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
இந்தச் சம்பவத்தை ரஷ்ய வெளிவிவகார அமைச்சு நேற்றிரவு உறுதிப்படுத்தியுள்ளது.
பார ஊர்தி ஒன்றின் சாரதியே, ரஷ்ய தூதரக நிர்வாக, தொழில்நுட்பப் பணியாளரான ரணவிரு என்பவரைத் தனது வாகனத்தால் மோதிக் கொன்றார் எனவும், இலங்கைத் தூதரக இரண்டாவது செயலர் ரத்நாயக்க என்பவர் நெஞ்சில் படுகாயமடைந்துள்ளார் என்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்காக ரஷ்யா தனது கவலையை தெரிவித்துள்ளது.
0 Comments