குருநாகல் மாவட்டம் குளியாபிட்டிய மற்றும் அதனை அண்டிய புத்தளம் மாவட்டத்தை பொதுவாக வடமேல் மாகாணத்தை தழுவிய பகுதிகளில் இனவெறி குண்டர்கள் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான மதஸ்தளங்கள், வியாபார நிலையங்கள், குடியிருப்பு வீடுகள் உட்பட பல சேதங்களை விளைவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
குறித்த சம்பவங்கள் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிதுள்ளனர்.
கொட்டரமுல்ல பகுதியில் உள்ள பௌசுல் அமீர்டீன் என்பவர் குறித்த தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. ஜனாசா வீட்டுக்கு சென்று அன்னாரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் முஸ்லிம் அமைச்சர்கள் பலர் சென்று தெரிவித்துள்ளார்கள்.
இனவெறி குண்டர் கூட்டத்தினால் பள்ளிவாயல்கள், அல் குர்ஆன் என்பனவும் தீக்கிரையாக்கப்பட்டதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளி நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.
அச்ச சூழ் நிலையிலும் நோன்பு மாத காலத்தில் இவ்வாறான இனவாத தாக்குதல் எம்மை நோக்கி நடாத்தியமை தொடர்பில் தாங்கள் நிம்மதியற்ற வாழ்க்கையுடன் வாழ வேண்டியதாகவும் தெரிவிக்கின்றார்கள். பல கோடி ரூபா சொத்துக்களுக்கு சேதங்களை உருவாக்கி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
மெடிகே அனுகன மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாயல், பிங்கிரிய கிண்ணியம ஜூம்ஆ பள்ளிவாயல், ஹெட்டிபொல கொட்டம்பிட்டி மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல், மஸ்ஜிதுல் அல்அம்மர், அல் ஜமாலியா மத்ரஸா, நிக்கப் பிடிய தாருஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயல் போன்ற மதஸ் தலங்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருக்கும் அல் குர்ஆன் உட்பட பல பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு நாசகாரமாக தீமூட்டப்பட்டுள்ளது. இது தவிர ஏனைய இடங்களிலும் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவ இடத்துக்கு முஸ்லிம் அமைச்சர்கள் குழுவினர் அங்கு சென்று மக்களது நிலவரங்களை கேட்டறிந்துள்ளதுடன் குறைகள் தொடர்பில் மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments