புகழ் பெற்ற வானொலி அறிவிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம் ஜிfப்ரி அவர்கள் காலமானார்.

அன்னார் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் தனது 60ஆவது வயதில்  நேற்று இரவு காலமானார்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று, குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானப் பாட ஆசிரியரான இவர் களுத்துளை ஜீலான் மத்திய கல்லூரி, தொடவத்தை அல் பஹ்ரியா பாடசாலை ஆகியவற்றில் அதிபராகவும் கடைமயாற்றினார். நாடுதழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து அதிபர்களில் இவரும் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கை வானொலியில் அல்லியின் ஹலோ உங்கள் விருப்பம், பாஹிமின் பரவசப் பயணம், அறிவுக் களஞ்சியம் போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக நேயர்களின் விருப்பத்துக்குரிய அறிவிப்பாளராக திகழ்ந்த ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, நாடுதழுவிய ரீதியில் பொது அறிவு, விஞ்ஞானம் சார்ந்த விடயங்களை போதிப்பவராகவும் இருந்து வந்தார். வானொலியின் சிறந்த செய்தி வாசிப்பாளராகவும் திகழ்ந்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். அரசியல், சமூகசேவையில் ஈடுபாடு கொண்ட இவர் பல அமைப்புக்களின் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.

இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்திலும் நீண்டகாலம் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி முன்வைப்பாளராகவும் கடமையாற்றிய அனுபவமுள்ள இவர் பத்திரிகைத் துறையிலும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யா அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் நுழையச் செய்வாயாக!..அமீன்!!

-ULNH.Hutha Umar-