மதுரைக்கு நேற்று முதல் சர்வதேச விமான சேவை துவங்கியது. இலங்கை கொழும்புவிலிருந்து நேற்று பகல் 2.15 மணிக்கு ஏர்பஸ் ரக விமானம் மிஹின் லங்கா 120 பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் பகல் 3 மணிக்கு மதுரை விமான நிலையத்தை அடைந்தது.
இது மதுரைக்கு வரும் முதல் சர்வதேச விமானம் ஆகும். இதன் மூலம் சர்வதேச விமான சேவை மதுரைக்கு நேற்று முதல் துவங்கியுள்ளது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மதுரை விமான நிலைய இயக்குநர் சங்கையா பாண்டியன், கஸ்டம்ஸ் கமிஷனர் நயினார். துணை கமிஷனர் மீனலோசினி, அதிகாரி சந்திரசேகர், டிராவல்ஸ் கிளப் தலைவர் முஸ்தபா, பாலிகா டிராவல்ஸ் ஸ்ரீராம், வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேலு வரவேற்றனர்.

பயணிகள் பெரிய கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர். அந்த விமானம் மீண்டும் மதுரையிலிருந்து 4.15 மணிக்கு இலங்கைக்கு 109 பயணிகளுடன் புறப்பட்டது.

வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் இந்த விமான சேவை இருக்கும். இந்த விமானத்தின் மூலம் உலக நாடுகள் அனைத்திற்கும் செல்பவர்கள், இந்த விமானத்தில் கொழும்பு சென்று அங்கிருந்து அனைத்து நாடுகளுக்கும் செல்ல முடியும். இதன்மூலம் மதுரையின் வர்த்தகம் பெரும் வாய்ப்புள்ளது. பயணிகளுக்கும் நேரம் மிச்சம், வசதியாகவும் இருக்கும்.